கம்போங் ஜாவா ஆலயத்தில் கவர்ச்சி நடனம்; மலேசிய இந்து சங்கத்திடம் நிர்வாகம் மன்னிப்பு கோரியது! (VIDEO)

ஜூன் 18- கிள்ளானில் உள்ள கம்போங் ஜாவா மகா மாரியம்மன் ஆலயத்தில் நடந்த கலை நிகழ்ச்சி ஒன்றில் சமயத்திற்கு புறம்பான வகையில் கவர்ச்சி நடனம் அரங்கேறியதை அடுத்து ஆலய நிர்வாகம் சார்பில் அதன் தலைவர் திரு.மணி மலேசிய இந்து சங்கத்திடமும் பொதுமக்களிடமும் மன்னிப்பு கோரினார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், சம்பந்தப்பட்ட ஆலயத்தில் சமயத்திற்கும் கலாச்சாரத்திற்கும் புறம்பான அருவருக்கத்தக்க வகையில் நடனம் அரங்கேறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் தொடர்பில், மலேசிய இந்து சங்கத்தின் சிலாங்கூர் மாநில பேரவையின் தலைவர் தொண்டர்மணி முனியாண்டி மற்றும் ஶ்ரீ அண்டலாஸ் வட்டாரப் பேரவையைச் சேர்ந்த திருமதி சரஸ்வதி ஆகியோர் சம்பந்தப்பட்ட ஆலய நிர்வாகத்தினைச் சந்தித்து விளக்கம் கேட்டனர். விளக்கம் அளித்த ஆலயத் தலைவர், நடந்த சம்பவத்திற்காக தனது வருத்தத்தையும் மன்னிப்பையும் மலேசிய இந்து சங்கத்திடம் தெரிவித்தார்.

மேலும், இதுப்போன்ற சமயத்திற்கு புறம்பான சம்பவங்கள் தங்கள் ஆலயத்தில் இனி நடக்காது எனவும் ஆலய நிர்வாகம் மலேசிய இந்து சங்கத்திடம் உத்தரவாதம் வழங்கியது.