கலைஞர் கருணாநிதி மறைவு; தமிழுக்கும் தமிழகத்திற்கும் பேரிழப்பு; மலேசிய இந்து சங்கம் இரங்கல்!

ஆகஸ்டு 8- தமிழக அரசியலிலும் தமிழ்மொழி வளர்ச்சியிலும் சிம்ம சொப்பனமாக விளங்கிய திமுகவின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவிற்காக மலேசிய இந்து சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் 1969 முதல் 2011ஆம் ஆண்டு வரையில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தவர் என்ற பெருமையைக் கொண்ட கலைஞர் கருணாநிதி, தமிழக அரசியலில் மட்டுமல்ல இந்திய அரசியலிலும் முக்கியமானவராக விளங்கினார்.

மேலும், சினிமா வாயிலாகவும் அரசியல் வாயிலாகவும் தமிழ்மொழிக்கு உயரிய அடையாளம் கொடுக்க கலைஞர் கருணாநிதி போராடினார். தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அதனை செம்மொழியாக பிரகடனம் செய்து உலக அரங்கில் தமிழை எழுச்சி பெற செய்தவர் கலைஞர் கருணாநிதி.

அவரின் மறைவு தமிழுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் ஈடுச் செய்யமுடியாத பேரிழப்பாகும்.