நிபந்தனையுடனான நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு காலக்கட்டத்தில் ஆலயங்களை மீண்டும் திறப்பதற்கான அறிவிப்பு

23 மே 2020 –

எதிர்வரும் 10 ஜூன் 2020ஆம் தேதி தொடங்கி பச்சை மண்டலங்களில் உள்ள இந்து ஆலயங்கள் உட்பட முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்களை மீண்டும் திறப்பது குறித்து கடந்த 21 மே 2020 ஒற்றுமைத்துறை அமைச்சு பத்திரிகை செய்தியை வெளியிட்டது. இந்த முடிவானது அன்றைய தினம் நடந்த சிறப்பு அமைச்சர்கள் குழு சந்திப்பு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

முஸ்லீம் அல்லாத வழிப்பாட்டுத் தளங்கள் மீண்டும் திறப்பது மீதான கலந்துரையாடலில் ஈடுப்பட்டு அனுமதி பெற முயற்சி செய்த ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஹலிமா சாடிக் அவர்களுக்கு மலேசிய இந்து சங்கம் தனது மனமார்ந்த நன்றினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேற்று அறிவிக்கப்பட்டது போல், பச்சை மண்டலத்தில் உள்ள மொத்தம் 84 இந்து ஆலயங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட ஆலயங்களின் பட்டியலை மலேசிய இந்து சங்கம் விரைவில் அறிவிக்கும். மேலும், பச்சை மண்டலங்களில் உள்ள மற்ற ஆலயங்களின் பெயர்களையும் ஜூன் மாத ஆரம்பத்தில் முன்மொழிய இந்து சங்கத்திற்கு ஒற்றுமைத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

நேற்று சம்பந்தப்பட்ட சமய அமைப்புகளுக்கு ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட அதிகாரப்பூர்வ செயல்பாட்டு தர விதிமுறையின் அடிப்படையில், 10 ஜூன் 2020ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் திறக்கப்படும் இந்து ஆலயங்கள், பக்தர்களுக்கு வாரத்தில் இருநாட்கள் மட்டுமே அதாவது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என்பதை மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

திறக்கப்படும் ஆலயங்கள் ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்ட கடுமையாக்கப்பட்ட செயல்பாட்டு தர விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். இதனை அடுத்து, மலேசிய இந்து சங்கம் ஆலய நிர்வாகத்தினருடன் கலந்து ஆலோசித்து, ஆலயங்களைத் திறக்கும் முன் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை உள்ளடங்கிய விரிவான செயல்பாட்டு தர விதிமுறையை தயார் செய்துள்ளது. விதிமுறைகளை ஆலயங்கள் மீறினால் சம்பந்தப்பட்ட ஆலயத்தின் அனுமதி மீட்டுக் கொள்ளப்படும் என்பதை ஆலய நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், ஆலயங்களில் திருமண வைபவங்கள் நடத்துவதை, அதிகாரிகளின் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.

மலேசியா இந்து சங்கம் இந்த நாட்டில் உள்ள அனைத்து இந்துக்கள் மற்றும் இந்து ஆலயங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பெருமை கொள்கிறது. மேலும் இந்த இக்கட்டான காலங்களில் அனைத்து இந்து ஆலயங்களுக்கும் சிறந்ததை செய்ய உறுதி கொண்டுள்ளது.