மலேசிய இந்து சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் ஒத்தி வைப்பு

ஜூன் 20-  சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை மலேசிய இந்து சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய செயலவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் போது தங்களின் பாரங்கள் நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில், ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறாமல் இருக்க நிரந்தர தடையுத்தரவு பெறுவதற்கு  கிருஷ்ணமூர்த்தி குப்பன், நேரு நாகப்பன், மதிவானன் முனுசாமி, முருகன் மாரியப்பன், நவின் குமார் சிங்காரவேலு, பிரேமலா திருஞானசம்பந்தன், குணசேகரன் கதிரவேலு ஆகிய எழுவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 21 நாட்களுக்கு முன்னதாக தங்களுக்கு கணக்கறிக்கை கிடைக்க பெறவில்லை என்றும் தங்கள் வழக்கில் பதிவு செய்துள்ளனர்.

இன்று காலையில் நீதிபதிக்கு முன்பு விசாரணைக்கு வந்தப்பின், வழக்கை விசாரித்த நீதிபதி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு நிரந்தர தடை விதிக்க முடியாது என்று கூறி, மலேசிய இந்து சங்கம் எதிர்வாதம் புரிய எதிர்வரும் ஜூன் 29ஆம் தேதியை நிர்ணயித்தார்.

மேலும், ஜூன் 24ஆம் தேதியன்று நடைபெறவிருந்த மலேசிய இந்து சங்கத்தின் 41வது ஆண்டு பொதுக்கூட்டத்தை ஒத்தி வைப்பதற்கு நீதிபதி உத்தரவு வழங்கினார்.

எனவே, ஜூன் 29ஆம் தேதி நடக்கவிருக்கும் வழக்கு விசாரணைக்குப் பிறகு மற்றொரு தேதி அறிவிக்கப்பட்டு மலேசிய இந்து சங்கத்தின் 41ஆம் ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.