வைரலாகும் பரிந்துரை; இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை!

05.05.2020 –

இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் ‘ஆலயங்களை மீண்டும் திறக்கும் வழிமுறை’ (Garis Panduan Pembukaan Semula Kuil-Kuil Hindu Di Malaysia) குறித்த பரிந்துரையானது, அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்பதால் அந்த பதிவை யாரும் பகிர வேண்டாம், பின்பற்றவும் வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.

கோவிட்-19 நச்சில் பெருந்தொற்று காரணமாக அரசாங்கம் நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு அறிவித்து அது இன்னும் அமலில் இருக்கிறது. இந்நிலையில், வழிப்பாட்டு தளங்கள் குறிப்பாக இந்து ஆலயங்களில் பொதுமக்கள் வழிப்பட அனுமதி கோரும் வகையில், மலேசிய இந்து சங்கம் அரசாங்கத்திடம் பரிந்துரை ஒன்றை அனுப்பியுள்ளது. ஆனால், இந்த பரிந்துரைக்கு அரசாங்கம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

ஆயினும், அனுமதி கிடைக்கும் முன்பாகவே சம்பந்தப்பட்ட பரிந்துரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. எனவே, இந்த பரிந்துரை பதிவினை யாரும் பகிர வேண்டாம் எனவும் ஆலயங்கள் இந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் எனவும் மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது. அரசாங்கம் விதித்த நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவு 12.05.2020ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில், அனைத்து வழிப்பாட்டுத் தளங்களும் குறிப்பாக இந்து ஆலயங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்படாது என மலேசிய இந்து சங்கம் மீண்டும் தெளிவுப்படுத்த விரும்புகிறது.